அதிவேகமாக பயணித்த லொறி ஒன்று சாரதியின் குடிபோதையில் கட்டுப்பாட்டை மீறி சுமார் 150 அடி பள்ளத்தில் இருந்த பாடசாலை கட்டிடத்தின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதனால் படுகாயமடைந்த சாரதி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலாவ – பலாங்கொடை பிரதான வீதியின் கெம்பியன் தோட்டப் பகுதியில் இன்று (31) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ பெட்ரோசோவ தோட்டத்திலிருந்து பொகவந்தலாவை நோக்கி அதிவேகமாக பயணித்த லொறி, பாடசாலைக்கு மேலே பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளம் கொண்ட கேம்பியன் தமிழ் மகா வித்தியாலய கட்டிடத்தின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
லொறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் பலர் பாடசாலை கட்டிடத்திற்குள் இருந்ததாகவும், எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ஆனால் பாடசாலை கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, லொறியின் சாரதி குடிபோதையில் இருந்ததாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.